வியாழன், 25 ஆகஸ்ட், 2011

பூ முகத்தில் புன்னகை..!

மனதில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோட வீதியையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ். "இந்த சந்தோசமான செய்தியை அம்மா வந்தவுடனே அவகிட்ட சொல்லணும்.." என்று எண்ணிய வண்ணம்  தன் விழிகளை வீதியை நோக்கி ஓட்டினான்.
           ஆர்த்தி, சூர்யாவின் ஒரே பிள்ளை தான் ஆகாஷ். காரியாலயமொன்றில் கடமை புரியும் ஆர்த்தி காலை ஒன்பது மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினால் நான்கு மணிக்குத் தான் வீடு திரும்புவாள். ஆர்த்தி தான் இப்படி என்றால், சூர்யா காலையில் ஆகாஷ் உறங்கிக் கொண்டிருக்கும் போது வேலைக்குப் புறப்படுவான். இரவு அவன் வீடு திரும்பும் போது ஆகாஷ் உறங்கிக் கொண்டிருப்பான். தினமும் இதே பல்லவி தான் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. தாய் தந்தை இருவரும் தொழில் புரிய வெளியே செல்லும் அவ்வீட்டிலே முதலாம் தரத்திலே பயிலும் ஆகாஷ் தனியனாக உலவிக் கொண்டிருப்பான்.

          தூரத்திலே வந்து கொண்டிருந்த தனது தாயை அடையாளம் கண்டு கொண்ட ஆகாஷ் அவளை நோக்கி ஓடினான்.

         "அம்மா... அம்மா.. நான் இன்டைக்கு உங்ககிட்ட ஒரு சந்தோசமான விஷயம் சொல்ல வேணுமம்மா.." என்று ஆனந்தக் கூத்தாடிக் கொண்டே கூறினான்.

    "என்ன.. ஆபிசிலிருந்து வரும் போதே உன் தொணதொணப்ப ஆரம்பிச்சிட்டியா? எனக்கு இன்டைக்கு சரியான டயர்ட் ஆக இருக்கு.. நான் சாப்பிட்டு முடிஞ்சதும் சொல்றதெல்லாம் சொல்லித் தொலை.." என்று எரிச்சலுடன் கூறினாள் ஆர்த்தி. அவள் இவ்வாறு கூறியதும் ஆகாஷின் அழகு முகம் ஒரு கணம் சுருங்கிப் போனாலும் பிறகு அம்மா தன் செய்தியைக் கேட்பாள் என்ற நம்பிக்கையுடன் அவள் உண்பதையே பார்த்துக் கொண்டிருந்தான். 

          ஆர்த்தி ஒருவாறு உண்டு முடிந்ததும் ஆகாஷ் அவளிடம் சென்று, "அம்மா.. விஷயத்த சொல்லட்டா அம்மா.." என ஆவலோடு கேட்டான். "ஐயோ.. சனியன் வந்துட்டாயா.. நான் இப்ப எந்த விசயத்தையும் கேட்குற நிலைமையில் இல்லை.. கொஞ்சம் தூங்கி எழும்பிட்டு வாறன்.." என்று வெடுக்கெனக் கூறி விட்டு படுக்கையில் சாய்ந்தாள் ஆர்த்தி.. 

           "ஏன் அம்மா நான் சொல்ற எதையும் கேட்க மாட்டேங்குறாங்க.. சரி.. பாவம்.. அம்மாக்கு அசாத்திய இருக்கும் போல. தூங்கி எழும்பிட்டு கேட்பா தானே.. பாவம் நல்ல வியர்த்தும் இருக்கே.." என்று அவளருகே வந்து அவள் விளிக்கும் வரை பார்த்துக்கொண்டே இருந்தான். 

           திடீரென விழித்துக் கொண்ட ஆர்த்தி, "ஐயோ.. எட்டு மணி ஆகிட்டுதா..? நாடகம் பார்க்கணுமே.." என்று பதறி அடித்துக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியை நோக்கி ஓடினாள். 

          "அம்மா.. இதக் கொஞ்சம் கேளும்மா.." என்று அவளிடம் வந்து கெஞ்சும் தோரணையில் கேட்டான். "என்னடா.. ஒனக்கு நான் நாடகம் பார்க்குற நேரத்துலய இதெல்லாம் சொல்றதுக்கு ஞாபகம் வரும். போடா.. போ.. " என்று கத்தினால் ஆர்த்தி.. 

          "அம்மா.. நீ தானே சொன்னாய்.. தூங்கி முடிந்ததும் ஏன் கதையைக் கேட்பாய் என்று.. கேளும்மா.. சொல்றேன்.. இன்டைக்கு எங்க ஸ்கூல்ல எல்லாருக்கும்..." என்று ஆகாஷ் கூறிக் கொண்டே போக ஆர்த்திக்கு கோபம் ஜிவ்வென்று ஏறியது. 

           "நீ ஒன்றும் சொல்லத் தேவையில்ல.. வீட்ல கெடந்து படிச்சாப் போதும்.. போ.. போ.. உள்ளே.." என்று கத்தினால் அவள். இவ்வாறு கத்தியும் உள்ளே போகாமல் அங்கேயே நின்று கொண்டு எதையோ சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும் ஆகஷைக் கண்டதும் ஆர்த்தியின் கோபம் எல்லை கடந்தது. எழுந்து வந்து அவனை தாறு மாறாக அடித்தாள். "ஐயோ,.. அம்மா அடிக்காதிங்கம்மா.." என்று கதறி அழுது கொண்டு, புழு துடிப்பதைப் போல துடித்துக் கொண்டு தன் உள்ளறை நோக்கி ஓடினான். 

          உள்ளே வந்து கட்டிலில் சாய்ந்த அவனது நெஞ்சில் தாய் கையால் அடித்த அடிகளை விட, அவள் சொல்லால் அடித்தவற்றின் துயரமும் தன் பேச்சைக் கேட்கவில்லை என்ற கவலையுமே நிரம்பி வலிந்து கொண்டிருந்தது. அவன் கண்கள் சூடான கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தன. அன்னையின் அடியாள் துவண்டு போன அவனுக்கு பக்கத்தில் யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வு தோன்றியது. ஆகாஷ் திரும்பிப் பார்த்தான். பக்கத்தில் அவனது கரடி பொம்மை. அதனைக் கண்டதும் ஆகாஷ் தன் கண்களில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் கண்ணீர் வெள்ளத்திற்கு அணைக்கட்டு போட்டு விட்டு தன் கரடி பொம்மையை வாரியெடுத்து அணைத்தான். 

           "ஹலோ. மை டியர் டெடி.. நான் என் கதைய உன்கிட்ட சொல்லட்டா.. நீயாவது மறுக்காம கேட்பாய் தானே.. எங்கட ஸ்கூல்ல இன்டைக்கு ஒரு பாட்டுப் போட்டி நடத்தினாங்க.. athula எனக்குத் தான் முதல் பரிசு.. டீச்சர் எனக்கு ஒரு கலர்ப்பெட்டி தந்தாங்க.. எனக்கு எவ்வளவு சந்தோசமா இருந்திச்சி தெரியுமா..? அதத்தான் நான் ஆசையோட அம்மாக்கிட்ட சொல்லணும் என்டு ஓடி வந்தேன்.. அவ கேட்கல.. இனிமே எதாவது விசேசம் இருந்தா உன்கிட்டயே சொல்றேன்..." என்று தன் கரடி பொம்மையிடம் ஏதேதோ கூறிய வண்ணம் அதனை அனைத்துக் கொண்டு உறங்கத்தொடன்கினான். தாய் மடி தராத சுகத்தை அக்கரடியின் அரவணைப்பு கொடுத்ததாலோ என்னவோ தன்னை அறியாமல் உறங்கியும் விட்டான். 

           அடுத்த நாள் விடுமுறை தினம். ஆர்த்தி காலையிலே எழுந்து கருமமே கண்ணாயினாள். சூர்யா விடுமுறை என்றாலும் வீட்டிலே இருப்பதில்லை. அவனது விடுமுறை நாட்களெல்லாம் பெரும்பாலும் நண்பர்கள் வீட்டிலேயே கழியும். 

           ஆகாஷ் காலையிலே எழுந்து பொழுது போகாமல் வீதியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது நண்பர்கள் வீதியிலே விளையாடுவதைக் கண்ட அவன் தன் தாயிடம் ஓடோடிப் போய்.., 

           "அம்மா.. நான் இன்டைக்கு மட்டும் என் பிரெண்ட்ஸ் மாரோட போய் விளையாடிட்டு வரவா அம்மா.." என்று தனக்கே உரித்தான மழலை மொழியில் கேட்டான். 

           உடனே ஆர்த்தி,"வெளியில போய் விளையாடனுமா..? இங்க உள்ளே உனக்கு என்ன குறை..? வெளியில எல்லாம் விளையாடத் தேவையில்ல.. உள்ளே போய் அந்தக் கம்ப்யூடர் கேம்ஸ் விளயாடினப் போதும்.." என்று அப்பிஞ்சு நெஞ்சை முள்ளால் தைப்பது போலக் கூறினாள். 

          "இல்ல அம்மா.. எங்கட டீச்சர் சொல்லியிருக்காங்க.. வெளியில போய் ஓடியாடி வெளயாடினத் தான் எங்கட உடம்பு நோயில்லாம இருக்குமாம்.." என்று எப்படியாவது தபக்கு நண்பர்களுடன் விளையாட அனுமதி கிடைக்கும் என்ற நப்பாசையில் கேட்டான். 

          "என்ன நீ எங்களுக்கே சொல்லித்தர வாரியா..? உன்ன விட எங்களுக்கு நல்ல தெரியும்.. பெரிய ஆள் மாதிரி பேச வந்துட்டான் அதிகப் பிரசங்கித் தனமா.. நீ ஒண்டும் எங்களுக்கு சொல்லித் தரத் தேவையில்ல.. போ.. போய் உள்ளே கிட.." என்று ஆகாஷிடம் எரிந்து விழுந்தாள்.

           தன் உணர்வுகளுக்கு மதிப்பளியாத கருத்துக்களுக்கு இடம் கொடாத, தன்னை, தன் ஆசைகளைப் புரிந்து கொல்லாத தாயின் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும், அவனால் என்ன தான் செய்து விட முடியும் வாய் பொத்தி முகத்தை மூடி அழுவதைத் தவிர.  

           தன்னறை ஜன்னல் வழியே தன் நண்பர்கள் விளையாடுவதையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ். தனக்குத் துணையாக இருக்கும் கரடி பொம்மைக்குக் கூட தன்னுடன் விளையாட உயிரில்லையே என்று நினைக்கும் போது அவனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. நெஞ்சம் விம்மி வெடிக்கப் பார்த்தது. தன் கவலைகளை எல்லாம் தன் சின்ன இதயத்திற்குள் பூட்டிக் கொண்டவனாக ஜன்னல் கம்பிகளைப் பற்றிய வண்ணம் வீதியில் விளையாடும் தன் நண்பர்களையே பெரும் துயரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். இவ்வாறு இருக்கையில் திடீரென அவனுக்கு ஒரு விடயம் ஞாபகத்துக்கு வந்தது. ஆமாம், அவனது ஆசிரியை அவனுக்கு வாங்கிக் கொடுத்த கலர்ப்பெட்டி நினைவுக்கு வந்தது.

           உடனே ஆகாஷ் தன் கலர்ப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து ஒவ்வொரு கலராக எடுத்து தன் அறைச் சுவரில் ஓவியம் வரையத் தொடங்கினான். அப்பிஞ்சு நெஞ்சன் தன் கவலைகளை சற்று நேரம் அடக்கி வைத்து விட்டு சுவரில் ஓவியம் வரித்து கொண்டிருந்தான். தன் என்னத்து ஏக்கங்களைப் பிரதிபலிக்கும் விதமாக அங்கும் இங்கும் கோடுகளை இழுத்து சித்திரத்தை தீட்டத் தொடங்கினான்.



          தற்செயலாக அந்தப் பக்கம் வந்த ஆர்த்தி இவனது செய்கையைக் கண்டால். உடனே அவளுக்கு  கோபம் தலைக்கு மேல் ஏறியது. உடனே ஒரு கம்பை எடுத்து வந்து ஆகாஷின் முதுகில் ஒரே போடாகப் போட்டாள். உடனே ஆகாஷ் பலி கொடுக்கவிருக்கும் ஆடு துடிப்பதைப் போல துடித்தான். "ஐயோ.. அம்மா.." என்று ஒப்பாரி வைத்து அழுதான்.


            "என்ன..? உனக்கு ஆயிரம் முறை சொன்னாலும் விளங்குதில்ல.. போன வாரம் தானே சுவருக்கு பெயின்ட் பண்ணினோம். கழுத.. கழுத.. அத வந்து நாசமாக்கி விட்டது.." என்று சுள்ளேனத் தாக்கும் அம்புகளாக ஒவ்வொரு வார்த்தையையும் வெளியிட்ட அவள் வெடுக்கென வெளியேறினாள்.

           தாயின் அடிகளையும் சொல்லம்புகளையும் தாங்க முடியாமல் துவண்ட குழந்தை தன் ஒவ்வொரு துளிக் கண்ணீரையும் கரடி பொம்மையின் மடியில் விட்டுக் கொண்டிருந்தது. தனது ஒவ்வொரு சோகத்தையும் அதனிடம் ஒவ்வொன்றாக ஒப்புவித்துக் கொண்டிருந்தது.

           இவ்வாறாக தன் ஆசைகளை, எண்ணங்களைக் கருத்துக்களை ஆகாஷ் தன் தாயிடம் சொல்வதும், அவள் அதனைத் தடுப்பதும், அவன் அதற்குப் பதிலாக வேறு ஏதாவது வேளையில் ஈடுபடுவதும், தாயிடம் வாங்கிக் கட்டிக் கொள்வதும், பின் தனது கரடி பொம்மையிடம் தன் துயரங்களைச் சொல்லி அழுவதுமாய்க் காலம் கடந்தது.

            நாட் செல்ல செல்ல ஆகாஷின் நடத்தையில் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் இப்போது யாருடனும் கதைப்பதில்லை. தாயின் முகத்தைப் பார்ப்பதைக் கூட அவன் தவிர்த்துக் கொண்டான். ஆய கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு தன் போக்கில் அமைதியாக இருப்பான் அவன். இப்போதெல்லாம் வீட்டில் ஆரவாரமே இல்லை. வீட்டில் எப்போதும் மயான அமைதியே நிலவியது.

           அன்று விடுமுறை தினம். ஆர்த்தியும் சூர்யாவும் வீட்டிலே இருந்தார்கள். அப்போது வீட்டின் அழைப்பு மணி அலறியது. கதவைத் திறந்தாள் ஆர்த்தி. அங்கே ஆகாஷின் வகுப்பாசிரியை நின்றிருந்தார். அவரை வரவேற்று உள்ளே அழைத்தாள் ஆர்த்தி.

           "உங்களைச் சந்தித்து உங்க மகன் ஆகாஷப் பத்தி சொல்ல வேண்டும் என்று பல நாட்களாகவே நினைத்திருந்தேன். இப்போ தான் நேரம் கிடைத்து வந்தேன்." என்று அவள் கூறியதும், பதறிப் போன ஆர்த்தி,
 
           "டீச்சர்.. ஆகாஷ்.. எதாவது தப்பு செஞ்சிட்டானா..?" என்று பதறியபடியே கேட்டாள்.

           "அப்படியொன்றுமில்லை... கொஞ்ச காலமாக நானும் அவதானிச்சு வாறன். முன்பு போல படிப்புல ஆர்வம் காட்டமா.. எங்கயோ வெறிச்சுப் பார்த்துக் கொண்டு இருக்கிறான். அவனுக்கிட்ட இருந்த பழைய துடிதுடிப்பு, குறுகுறுப்பு இப்போ ஒரு துளியும் அவனுக்கிட்ட இல்ல. வகுப்புல யார்ட்டையும் ஒட்டாம தனியா உட்கார்ந்திருப்பான். எதையோ பறிகொடுத்தது போல எப்பவும் ஒரே சிந்தனையோட இருப்பன். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று புரியல.. மனசுல எதோ பெரிய கவலை இருக்குது போல.." என்று ஆசிரியை நிறுத்திய போது,

           "அவனுக்கு இங்க ஒரு குறையுமே இல்ல டீச்சர்.. உணவுக்கோ, உடைக்கோ, விளையாட்டு சாமனுக்கோ குறைவில்லா.. ஏன் இப்படி இவன்..?" என்று சிந்தனை வசப்பட்டாள்  ஆர்த்தி..
 
            டீச்சர் போய் விட்டார். டீச்சர் கூறிய விடயங்களை தன் கணவனிடம் கூறிய ஆர்த்தி, அவனையும் அழைத்துக் கொண்டு ஆகஷைத் தேடினாள்.


அங்கே ஆகாஷின் அறைக் கதவு சாத்தப் பட்டிருந்தது. அவன் தனது கரடி பொம்மையுடன் கதைத்துக் கொண்டு இருந்தான்.

           "இனிமே எனக்கு எல்லாமே நீ தான். எனக்கு யாருமே தேவை இல்ல. என் அம்மா, அப்பா, எல்லாமே நீ தான். இனி அப்படி தான் உன்னக் கூப்பிடப் போறேன். அம்மா.. அம்மா.. நான் உன் மடியில கொஞ்சம் சாயட்ட அம்மா.." என்று கூறியவன் பொம்மையின் மீது தலை வைத்து சாய்ந்து கொண்டான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அதைக் கரடி பொம்மையின் கைகளால் துடைத்துக் கொண்டான். பின் எதை எதையோ அந்தக் கரடி பொம்மையிடம் கூறிக் கவலைப் பட்டுக் கொண்டான். இந்தக் காட்சியைக் கண்டதும் அவனது பெற்றோர் உள்ளே ஓடி வந்தார்கள்.



           "ஆகாஷ் உனக்கென்ன பைத்தியமா..?" என்று கூறிய படி அந்தக் கரடி பொம்மையை அவன் கையில் இருந்து பிடுங்கி தூர எறிந்தாள் ஆர்த்தி.

           "அம்மா.. என் அம்மாவைத் தூக்கி வீசிட்டாங்க..." என்று கத்தியபடியே மயக்கமானான் ஆகாஷ். அவனைப் பார்க்கப் பார்க்க அவர்களுக்கு நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. அவனைத் தூக்கி எடுத்துக் கொண்டு மனோதத்துவ வைத்தியரிடம் விரைந்தார்கள்.

           அவர்களின்  குடும்ப விபரங்களைத் தெரிந்து கொண்டார் டாக்டர். சில நிமிடங்களில் ஆகாஷ் மயக்கத்தில் இருந்து விடுபட்டு கண்களைத் திறந்தான். "என்ட கரடி அம்மா எங்க..?" என்றபடி மீண்டும் மயக்கமானான் அவன். டாக்டரின் பலத்த முயற்சியின் பின்னர் மீண்டும் அவன் கண் விழித்தான்.

           தனது பரிசோதனை அறைக்கு ஆகாஷை அழைத்துப் போன டாக்டர், ஹிப்னாடிஷம் செய்வதற்கு ஆயத்தமானார். அரைத் தூக்கத்தில் இருந்த ஆகாஷிடம் கேள்விகளைத் தொடுக்கத் தொடங்கினார் டாக்டர். அவனது பெற்றோர் கவலை தோய்ந்த முகத்துடன் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள்.

            "உன் பெயர் என்ன..?"

             "ஆகாஷ்.."

             "உங்க அம்மா அப்பா உங்களுடன் அன்பா இருக்காங்களா..?"
 
           "அவங்களுக்கு என் மேல அன்பெயில்ல.. அவங்க எண்ணக் கவனிக்குறதே இல்ல. நானா அப்பா முகத்தக் காண்றதே குறைவு.. அவங்க யாரும் என்னோட அன்ப பேசினதோ, அணைச்சு முத்தமிட்டதோ கிடையாது. நான் எதைச் சொன்னாலும் அவங்க அதைக் கேட்குறதே இல்ல. அவங்க என்ன மதிக்குறதே இல்ல. என்ட ஆசைகள விளங்கிக் கொள்றதும் இல்ல. யாரோடையும் என்ன விளையாட விடாம வீட்டுக்குள்ளயே அடச்சு வெச்சிருக்காங்க. எனக்கு அம்மா அப்பா எல்லாமே என் கரடி பொம்மை தான். என் பொம்மையைக் கொடுங்க.." என்று தேம்பி அழத் தொடங்கி
விட்டான் ஆகாஷ்..

          பெற்றோரின் பக்கம் திரும்பினார் டாக்டர். "உங்க மகன் சொன்னத கேட்டிங்க தானே.. உங்க நடத்தைகளால அவன் மனம் எந்த அளவு பாதிக்கப் பட்டிருக்கு எண்டு விளங்குது தானே..?" டாக்டர் கேட்ட போது அவர்கள் பேச சக்தியற்று கண்ணீரோடு தலை குனிந்து நின்றிருந்தார்கள்.

            "வயிறு நிறையச் சப்படும், உடுப்பதற்கு விதம் விதமான ஆடைகளும், வீடு நிறைய விளையாட்டுச் சாமான்களும் கொடுத்து விட்டால் போதுமென்று நீங்க நினைத்தீங்க. ஆனா அது தவறு. இதை விட ஒரு பிள்ளை பெற்றோரின் அன்பையும், ஆதரவையும் தான் அதிகமா எதிர்பார்கிறது.." என்று விபாரித்தார் டாக்டர்.

             "நாங்க எந்தக் குறையுமே வைக்காம இருந்தாலும் எங்களையும் மீறி நாங்க அறியாமலே தவறு நடந்திருக்கிறது டாக்டர். " என்று கண்ணீரோடு உருகி நின்றால் ஆர்த்தி..

             "நாம குழந்தைகள அவங்க குழந்தைகள் தானே என்று அலட்சியமாக நடத்தாம அவங்கள மதிக்கணும். அவங்க பேச்ச, உணர்வுகள, கருத்துக்கள மதிக்கணும். அவங்க அபிப்ராயங்களுக்கு இடம் கொடுக்கணும். அவங்களா நான்கு சுவர்களுக்குள்ள அடச்சு வைக்காம பிள்ளைகளோட அவங்கள சுதந்திரமாக விளையாட விடனும். இப்படி நீங்க செஞ்சீங்கன்னா அவன பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியும்..." டாக்டர் கூறி முடித்த போது,

            "நிச்சயமாக டாக்டர், நான் கொஞ்ச காலத்திற்கு லீவு போட்டுட்டு அவனோடே இருந்து அவன கவனிக்கப் போறேன்." என்று கூறியவாறு ஆகாஷிடம் போய்,

             "ஆகாஷ்.. மகனே.. என் செல்வமே..!" என்று கூறி அவனை நெஞ்சோடு சேர்த்து அவனை நெஞ்சோடு சேர்த்து அனைத்து முத்தமிட்டாள். சூர்யாவும் அவனை ஆரத் தழுவி கைகளில் தூக்கிக் கொண்டான். பின் அவன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டான்.

              இப்போது அந்தப் பூ முகத்தில் புன்னகையும் இனம் புரியாத மகிழ்ச்சியும் பளிச்சிட்டு நின்றது. இனி அந்தப் புன்னகை நிலைக்கப் போகின்றது.

 
(2006  ஆம் ஆண்டு சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்புப் பல்கலைக் கழகத்தினால் நடத்தப் பட்ட சிறுகதைப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற கதை..)